Category: தலைவர்கள்

“திருப்பதி தமிழர்களுக்கே”
ம.பொ.சி. தொண்டர் படையோடு புறப்பட்டு போராடிய நாள்:

16.8.1947

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடிய தமிழக எல்லைப் மீட்புப் போராளி ம.பொ.சி. அவர்கள் “போர் முறையும் போர் முனையும் மாறும் நாள்” என்று அறிவித்தார்.

திருப்பதியை மீட்பதே இனி என் முதல் வேலை என்று கூறி விட்டு மறுநாள் (16.8.1947) காலையில் 12 பேர்களோடு வடக்கெல்லையில் உள்ள திருப்பதி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் புறப்பட்ட தமிழரசுக் கழகத் தோழர்களின் பெயர்கள் வருமாறு:

1.திரு. கொ.மோ. ஜனார்த்தனம்
2.திரு. சோம. சுவாமிநாதன்
3.திரு. தாமோதரம்
4.திரு. வேங்கடசாமி
5.திரு. கிருஷ்ணமூர்த்தி
6.திரு. அம்மையப்பன்
7.திரு. விசுவநாதன்
8.திரு. லூயிஸ்
9.திரு. மு. வேணுகோபால்
10.திரு. தங்கவேலு
11.திரு. டி. ஆறுமுகம்
12.திரு. ஜி. சுப்ரமணியம்

இந்தத் தோழர்களை தமிழினத்தவர் ஒருபோதும் மறத்தல் கூடாது. அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயராகும்.

ஏனெனில், திருப்பதி நோக்கிச் சென்ற இந்தத் தமிழர்கள் மீது ஆந்திரர்கள் நடத்திய வன்முறைகள் சொல்லி மாளாது.

1911ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் வரை திருப்பதிக்கு தெற்கேயுள்ள பகுதிகள் முழுவதும் தமிழகத்திற்கு சொந்தமாகவே இருந்து வந்தது. திருப்பதியும், திருக்காளத்தியும் தமிழ் வழங்கும் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் இருந்தன.

ஆனால், ஆந்திரப்பகுதியோடு இருந்த கடப்பாவிலிருந்து சில வட்டங்களையும் தமிழ் மாவட்டமான வட ஆற்காட்டிலிருந்து சில வட்டங்களையும் பிரித்தானிய அரசு பிரித்து சித்தூர் மாவட்டம் என்று அறிவித்தது. இது ஆந்திரர்கள் திருப்பதி, திருக்காளத்திப் பகுதிகளை சொந்தம் கொண்டாட ஏதுவாகிப் போனது.

1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி கன்னியாகுமரி முதல் வட வேங்கடம் வரை உள்ள தமிழர் தாயகப்பகுதிகளை மீட்டு புதிய தமிழகம் அமைப்பதை தனது இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக ம.பொ.சி. அறிவித்தார்.

அதனை நிறைவேற்றும் பொருட்டுதான் ம.பொ.சி.யின் திருப்பதி பயணம் ஆகஸ்ட் 16ஆம் நாள் தொடங்கியது. அன்று காலை சென்னையிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டுத் திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தை அடைந்த தமிழரசுக் கழகக் குழுவினரை தமிழாசிரியரும் வடக்கெல்லைப் போராளியுமான மங்கலங்கிழார், திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் டி.எம். திருமலைப்பிள்ளை ஆகியோர் பெருங்கூட்டத்துடன் வரவேற்றனர். அந்நாளில் திருவாலங்காடு ஆந்திர மாநிலத்தின் பகுதியாக இருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திருவாலங்காடு சென்ற அன்று மாலை, அந்தக் கிராமத்தில், எல்லைக் கிளர்ச்சியின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது.

மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு கரடுமுரடான சாலைகளுக்கு இடையில் கனகம்மா சத்திரத்துக்குப் பயணமாயினர். அந்த ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் நடந்து கொண்டிருந்த போது , சத்திரத்துக்கு வெளியே தெலுங்கர்கள் கூட்டம் அணி திரண்டு எதிர் முழக்கமிட்டனர்.

அதைப் பொருட்படுத்தாமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருத்தணிக்குச் சென்றனர். அங்கு இருந்த நூற்றுக்கணக்கான கடைகளில் ஒரு கடையில் கூடத் தமிழில் பெயர்ப் பலகைகள் இல்லை. தணிகைத் தமிழர்கள் தெலுங்கில் பேசி வந்தனர். அங்கு எல்லாம் தெலுங்குமயமாக இருந்தது.

திருத்தணியில் நடந்த கூட்டத்திலும் தெலுங்கர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றபோது அங்கிருந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் வன்னியர் சத்திரமொன்றைக் காட்டி அங்கு பேசலாம் என்று சொல்லிக் கூட்டம் நடத்த உறுதுணையாய் நின்றார். அவர் தான் வடக்கெல்லைப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான திரு. கே. விநாயகம் ஆவார். அந்த சந்திப்பு தான் ம.பொ.சி., வினாயகம் ஆகிய இருவரின் முதல் சந்திப்பாகும்.

வன்னியர் சத்திரத்தில் கலந்து கொண்ட தமிழர்களிடம் பேசிய ம.பொ.சி. தமிழிலேயே பேச வேண்டும், பெயர்ப் பலகைகளை தமிழிலேயே எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு இளைஞர்களின் பேரணி தணிகைத் தெருக்களில் நடைபெற்றது. அதில் ” தணிகை தமிழருக்கே” என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

அங்கிருந்து தமிழரசுக்கழகக் குழுவினர் கிளம்பி நகரி (புதுப்பேட்டை) சென்றனர். அங்கு திரு. வரதப்ப முதலியார் என்பவர் சிறப்பான முறையில் வரவேற்றார். பின்னர் சிவசக்தி வேல் என்பவரின் கொட்டகைக்கு முன் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ம.பொ.சி. குழுவினருக்கு எதிராக சென்னை மாநில சட்ட மன்ற உறுப்பினர் கே.வரதாச்சாரியார் என்ற தெலுங்கரின் சகோதரியார் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக்கொண்டு எங்களுக்கு ஆந்திராவும் வேண்டாம், தமிழ்நாடும் வேண்டாம், ” சித்தூர் சித்தூர்காரர்களுக்கே” என்று தமிழில் முழக்கமிட்டு வந்தார். அப்போது அந்தக் கும்பலின் கூச்சலுக்கு இடையே பேசிய ம.பொ.சி. “சித்தூர் சித்தூர்காரர்களுக்குத்தான். அதை யாரும் அபகரிக்க முடியாது. அதை எந்த நாட்டோடு சேர்த்து பட்டா செய்வதுதான் இன்றைய பிரச்சினை” என்றார்.

நகரி கூட்டத்தை முடித்துக் கொண்டு புத்தூர் சென்ற குழுவினரை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரு. துரைசாமி முதலியார் தலைமையில் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ம.பொ.சி. வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆந்திரர்களின் ஆசைமொழிக்கு பலியாகாமல் தமிழர்களோடு சேர்ந்து போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.

ஆகஸ்ட் 19ஆம் நாள் அக் குழுவினர் திருப்பதி தொடர்வண்டி நிலையம் அடைந்தனர். அங்கு ஆந்திர இளைஞர்கள் சிலர் வீதிகளின் சுவர்களிலே “மீசைக்கார கிராமணியே திரும்பிப் போ! ” திருப்பதி ஆந்திரர்களுக்கே சொந்தம்” என்று எழுதி வைத்திருந்தனர். பல இடங்களில் கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அவருக்கு வரவேற்பு கொடுக்க வந்த ம.பொ.சி.யின் சிறை நண்பர்
திருப்பதிக் கீழ்த்திசை வேங்கடேசுவரர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நாராயணசாமி நாயுடு என்பவர் பயந்து போய் ம.பொ.சி. குழுவினரை திரும்பிப் போகுமாறு வற்புறுத்தினார். ம.பொ.சி.யோடு மங்கலங்கிழாரும் வந்திருந்தார். ம.பொ.சி. திரும்பிப் போவதை அவமானமாகக் கருதி, திரும்பிப் போக மறுத்து விட்டார்.

கீழ்த்திருப்பதியில் கலவரச் சூழலுக்கு இடையில் கோயில் குளக்கரையில் பொதுக் கூட்டம் தொடங்கியது.அப்போது நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கூச்சலிட்டனர்.

மங்கலங்கிழாரையும், கொ.மோ. ஜனார்த்தனம் ஆகிய இருவரையும் பேசவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குளக்கரையில் உள்ள மரங்களில் ஏறி கிளைகளை உடைத்து கூட்டத்தினர் மீது வீசினார்கள். ம.பொ.சி. பேசிய போதும் கூச்சல் நின்றபாடில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியோடு காணப்பட்டார்கள். ” வேங்கடத்தை விட மாட்டோம்” என்று ஒரு மணி நேரம் எழுச்சி உரையாற்றினார்.

அதிலே ” பந்தாடும் விஜயநகர ராசா முதல் பண்ணை ஜமீந்தார் பர்லா கிமிடி வரை – சட்ட நிபுணர் அல்லாடி முதல் சமய வேதாந்தி ராதா கிருஷ்ணன் வரை – பார்ப்பன எதிரி பொப்பிலி அரசர் முதல் பார்ப்பனப் பெரியார் பட்டாபி சீதாராமய்யா வரை எல்லோரும் ஆந்திர மகாசபையின் நிழலில் ஐக்கிய முன்னணி வகுத்து ” சென்னையோடு சித்தூரையும் சேர்த்து ஆந்திர மகாணத்தை அமைத்தே தீருவோம்” என்று போர் முரசு கொட்டுகின்றனர். இதன் எதிரொலியே தமிழரின் விழிப்பு.

இனி கேட்பாரற்ற நிலையில் ஆந்திரர்கள் தமிழரை கேவலப்படுத்த – தமிழரின் நிலத்தைப் பறிக்க தமிழரசுக் கழகத்தார் விட்டு வைக்கப் போவதில்லை ” என்று ஆவேசமாக முழங்கினார். இந்தப் பேச்சை அன்றைக்கு இந்து, தினமணி போன்ற ஏடுகள் பரபரப்பாக வெளியிட்டன.

அதையடுத்து ஆந்திர மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ஜி.ரங்கா அவர்கள் சென்னையில் மாநாடு நடத்தி அதிலே , “கிராமணியாரே, தமிழருக்கு திருப்பதி கிடைக்காது. தமிழரிடமிருந்து சென்னையைப் பறிப்போம்” ஏன்று திமிர்த்தனமாக பேசினார். அந்த மாநாட்டின் ஊர்வலத்திலே ” மதராஸ் மனதே” என்றதோடு, ” சலோ மதராஸ்” என்றும், தமிழர்களே சென்னையை விட்டு வெளியேறுங்கள் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.

ம.பொ.சி.யின் திருப்பதி மீட்பு போராட்டத்திற்கு எந்த கட்சியும் அப்போது ஆதரவளிக்க முன்வரவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

ம.பொ.சி.யின் தொடர் போராட்டத்தால், திருத்தணியை மட்டும் மீட்க முடிந்தது. தமிழர்களின் வழிபாட்டுத் தலமான
காளகத்தி, திருப்பதியை தமிழகம் இழக்க நேர்ந்தது.

தமிழர்களின் இழந்த தாயகப் பகுதிகளை மீட்டெடுக்க திருப்பதிக்கே சென்று போராடிய வீரத்தமிழ் மறவர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்!

-கதிர்நிலவன் தமிழ்த்தேசியன்
Tamilthesiyan.wordpress.com

ம.பொ.சி.யை மறந்த சென்னை தினம்

ம.பொ.சி.யை மறந்த சென்னை தினம்

“சென்னை தினம்” கொண்டாடுபவர்கள்
ம.பொ.சி.யை மறக்கலாமோ?

சென்னை நகரம் 22.8.1639ஆம் ஆண்டு உருவான நாளை “சென்னை தினம்” எனும் பெயரில் கடந்த பல்வேறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு செய்தி ஊடகங்களில் சென்னை குறித்து வரலாற்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்தும் விடாப்பிடியாகப் போராடி தமிழகத்திற்கு சென்னையை மீட்டுத் தந்த ம.பொ.சிவஞானம் குறித்தும் எந்தப்பதிவும் இல்லை.

தமிழரல்லாதவர்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதால் சென்னை மீட்புப் போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாகக் காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள் கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.

1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர். அப்போது ஆந்திரர்கள் சென்னையில் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் சென்னை நகரை தனக்கு சொந்தமாக்க விரும்ப வில்லை.

1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதில் ஆந்திரர்கள் தான் முதலமைச்சராக வந்தனர். 1920 முதல் 1947 வரை பதவிக்கு வந்த அறுவரில் ஐவர் ஆந்திரர். ஒருவர் தமிழர். இதன் காரணமாக சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு சொந்தம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்கு (1947) முன்னர் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்ட போது அதன் ஆலோசகராக சர்.பி.என். இராவ் என்பவர் இருந்தார். அவர் தமிழினத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தின் படி சென்னை மாகாணத்தை பிரிக்காமல் நிர்வாக வசதி என்ற பெயரில் இரண்டாகப் பிரிப்பது என்றும், அதன்படி வட சென்னை துணைமாகாணம், தென் சென்னை துணை மாகாணம் என்று இரண்டாக செயல்படுவது என்றும், இரு துணை மாகாணங்களுக்கும் சென்னை பொது தலைநகராக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை தெலுங்குத் தலைவர்களான டாக்டர். இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, தங்குத்தூரி பிரகாசம் பந்துலு ஆகியோர் ஆதரித்தனர். ஆந்திர மகாசபையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. சர்.பி.என்.ராவ் திட்டத்தின்படி சென்னை மாகாணம் இரண்டு துணை மாகாணமாகப் பிரிந்திருந்தால் ஆந்திரருக்கு சென்னையுடன் கூடிய மொழிவழி ஆந்திர மாகாணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழருக்கோ சென்னையை ஆந்திரருக்கு பறிகொடுத்ததோடு, தமிழகம், மலபார் மாவட்டம், தென்கன்னட மாவட்டங்கள் இணைந்த மூன்று மொழி பேசும் கலப்புத் துணை மாகாணம் அமைந்திருக்கும்.

நல்லவேளையாக அன்றைக்கு ம.பொ.சிவஞானம் தமிழர்கள் சார்பில் நின்று குரல் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் இரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்க முடியும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலை நகரைக் காத்திட வேண்டும் என்று ‘தமிழ்முரசு’ ஏட்டில் (1.4.1947) முழங்கினார். அதன் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.

1952ஆம் ஆண்டில் மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு என்பவர் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு ‘மதராஸ் மனதே’ என்று சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார். அவரை நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், “சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்” என்று பதிலுரைத்தார்.

16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். ஆந்திரர் போராட்டத்தை கண்டு அஞ்சிய பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று அறிவித்தார்.

அப்போது தங்குதூரி பிரகாசம் பந்துலு என்பவர் ஆந்திரத்திற்கு தற்காலிக தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார்.

சென்னையை ஆந்திரருக்கு சொந்தமாக்கும் கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டால் உடனே பதவி விலகுவேன் என்றும் அன்றைய முதல்வர் இராசாசி அறிவித்தார்.

அதன் பிறகு நேரு சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லா தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாலட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்றும், ஆந்திரத் தலைநகர் பற்றி பின்னால் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் கூறி ஆந்திரர்களின் கோரிக்கையை புறக்கணித்தார்.

1956இல் மொழிவழி மாகாணம் உருவாக்கப்பட்டு சென்னைத் தமிழ் மாகாணத்திற்கு சென்னை தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை மீட்புப் போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தினர் எவரும் பங்களிக்க மறுத்தே வந்தனர். மொழிவழித் தேசிய உணர்ச்சி திராவிட இயக்கத்தினர் எவருக்கும் இல்லையென்பது தான் கசப்பான உண்மையாகும்.

சென்னையை மீட்டுக் கொடுத்த ம.பொ.சிக்கு சென்னை நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சிலை நிறுவப்பட்டது. ம.பொ.சி.யை மறந்து விட்டு “சென்னை தினம்” கொண்டாடுவது தலையில்லாத முண்டத்தை கொண்டாடுவதற்கு ஒப்பாகும். எனவே, சென்னை தினம் கொண்டாடுபவர்கள் ம.பொ.சி.யை மறப்பதலாகாது!

ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம்

“வடக்கெல்லை மீட்பர்”

ம.பொ.சிவஞானம் பிறந்த நாள்

26.6.1906
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ” என்று தொல்காப்பியப் பாயிரத்துள் பனம்பாரனாரும், “நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை , வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு ” என்று பாரதியாரும் தமிழகத்தின் எல்லைகள் குறித்து பாடியுள்ளனர். 
தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர் உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் வெடித்தது. அப்போது மொழிவழி தமிழ் மாகாணக் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதில் தமிழக எல்லைகள் குறித்துப் பேசப்படவில்லை.
 
 1946இல் மீண்டும் மொழிவழி தமிழ் மாகாணக்  கோரிக்கைக்கு புத்துயிர் தந்ததோடு, குமரி முதல் மாலவன்குன்றம் வரை உள்ள தமிழர் தாயகப் பகுதிகளை மீட்பதைக் குறிக்கோளாகக் கொண்டு போராடியவர் “சிலம்புச் செல்வர்” என்று அழைக்கப்படும் ம.பொ.சி.ஆவார். மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்பதன் சுருக்கப் பெயர் ம.பொ.சி. என்பதாகும்.

ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் ( சாணான் குப்பம்) பகுதியில் 26.6.1906ஆம் ஆண்டு பொன்னுச்சாமி- சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். ம.பொ.சி. ஐந்தாம் வயதில் சென்னை புரசைவாக்கம் கிறித்துவ மிசினரிப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். இவரின் தந்தையார் கள் இறக்கும் தொழிலும், நெசவுத் தொழிலும் ஈடுபட்டும் குடும்பத்தின் வறுமை அகலவில்லை. இதன் காரணமாக ம.பொ.சி. மூன்றாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர முடியவில்லை.
 
அன்னை சிவகாமி அம்மையார் கல்வி அறிவு பெற்றவர் என்பதால் அவரிடமே ம.பொ.சி. கல்வி பயின்று எழுத்தறிவை வளர்த்துக் கொண்டார். தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற சமயப் பாடல்களை தன் தாயாரிடமிருந்து கற்றுக் கொண்டு இளம்வயதிலே இலக்கிய அறிவிலும் சிறந்தவராகத் திகழ்ந்தார்.
பேராயக்கட்சியின் புகழ்மிக்கத் தலைவர் வரதராஜுலு நாயுடு அவர்கள் நடத்திய “தமிழ்நாடு” இதழில் அச்சுக் கோப்பாளராக ஏழாண்டுகள் பணியாற்றினார். அங்கிருந்தே இந்திய விடுதலை உணர்வைப் பெற்ற ம.பொ.சி. 1927ஆம் ஆண்டு பேராயக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பேராயக்கட்சி நடத்திய உப்பு சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுக்கடை மறியல் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறை சென்றார். 

1937இல் திருவாட்டி இராசேசுவரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 1942 ஆகத்து புரட்சிப் போரில் ஈடுபட்டு ம.பொ.சி.  சென்னை, வேலூர், தஞ்சை , அமராவதி (மகாராட்டிரம்) சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கு தரப்பட்ட  தரமில்லாத உணவு  ஒத்துக் கொள்ளாமல்  கடும் வயிற்று வலிக்கு ஆளானார். ( அந்த வயிற்றுவலி தான் அவர் சாகும்வரையிலும் துன்பத்தைத் தந்தது )  உடல் எடை குறைந்து இனி பிழைக்க மாட்டார் என்ற நிலையிலே  6.11.1943இல் விடுவிக்கப்பட்டார். 
ம.பொ.சி. அமராவதிச் சிறையில் இருக்கும் போது சிறைச்சாலையை தமிழ்க் கல்லூரியாக்கி கொண்டார்.  சங்க இலக்கிய நூல்களை வரவழைத்து ஆழ்ந்து கசடற கற்றார். புற நானூற்றை படித்த பிறகே தானொரு் தமிழன் என்னும் இன உணர்வும், தமிழர்கள் தனி தேசிய இனத்தவர் என்ற தெளிவும் அவருக்குப் பிறந்தது. 
பிற்காலத்தில் அவர் நடத்திய எல்லை மீட்புப் போருக்கு சிலப்பதிகாரமே அடித்தளமானது. 
அவர் கூறுகிறார்: தமிழகத்தைத் தமிழரே ஆண்ட காலத்தில் பிறந்த புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமலையாகவும் , தெற்கெல்லை குமரி முனையாகவும் கூறப்படுவதனைப் படித்த போது எனது நெஞ்சம் இறும்பூ தெய்தியது. மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவதென்பது அந்த நாட்டின் தவப்பயனாகும். அந்த எல்லைகளைப் பெண் தெய்வமும் ஆண் தெய்வமும் காவல் புரிந்து வருகின்றன என்ற செய்தியைச் சிலம்பின் மூலம்தான் முதன்முதலாக அறிந்தேன். அந்தத் தெய்வீக எல்லைகளை அன்றைய தமிழகம் இழந்து விட்டது என்பதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தியது. அவற்றை மீட்க வேண்டுமென்ற ஆர்வமும் என் நெஞ்சத்தில் அரும்பெடுத்தது. ”
தனது இலட்சியக் கனவை வெளிப்படுத்த 1946இல் ‘தமிழ்முரசு’ ஏட்டைத் தொடங்கினார். அதில் “தமிழ் வளர, தமிழர் வாழ , தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டுமென்றும், தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அளிப்பதன் மூலம் புதிய தமிழகத்தை காண்போம்” என்றும் எழுதினார்.

 
பேராயக்கட்சி புதிய தமிழகக் கோரிக்கைக்கு  ஆதரவளிக்க முன்வராத நிலையில், ம.பொ.சி.  அவர்கள் சென்னை மண்ணடி லிங்கிச்செட்டி தெருவில் 23.11.1946இல் திரு.வி.க. , தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் முன்னிலையில் “தமிழரசு கழகம்” என்னும் பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கினார். 14.1.1947இல் செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில்  நடைபெற்ற  தமிழரசுக் கழக அறிமுகவிழாவில் தைத் திங்கள் முதல்நாளை தமிழர்திருநாளாக கொண்டாடும்படி வேண்டுகோள் விடப்பட்டது.
15.8.1947இல் இந்தியா ஆங்கில ஏகாதிபத்தியத்தியத்திடமிருந்து விடுதலை பெற்றதும், ” போர் முடிய வில்லை, போர் முனை தான் மாறுகிறது” என்று முரசறைந்து விட்டு, மறுநாள் 16.8.1947இல் திருப்பதி நோக்கி பனிரெண்டு தோழர்களோடு புறப்பட்டார். அவருக்கு சிறந்த தமிழறிஞராகிய மங்கலங்கிழார், தளபதி விநாயகம் போன்றோர்  துணை நின்றனர்.

 திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், திருத்தணி போன்ற ஊர்களில் வட வேங்கட மீட்பின் தேவையை வலியுறுத்தி பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார். இறுதியில் திருப்பதிக்கு சென்ற போது தெலுங்கர்களின் கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இதனிடையில், வேங்கடத்தை மீட்டெடுப்பதாக அஞ்சாது பேசிவிட்டு  தமிழகம் திரும்பினார். 
சென்னை நகரம் என்பது தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதிக்குக் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள்  கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.

1912 இல் ஆந்திரா மகாசபை மூலம் விசாலா ஆந்திரா கேட்டுப் போராடிய ஆந்திரர்கள்  ‘மதராஸ் மனதே’ முழக்கத்தையும் கூடவே  எழுப்பினர். அதற்கு எதிராக  ம.பொ.சி. எழுப்பிய “தலையை கொடுத்தேனும் தலைநகர் காப்போம்” என்னும் முழக்கம் தமிழர்களை தட்டியெழுப்பியது.
1952க்குப் பின்னர் ஆந்திரர்கள் சென்னையைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு ் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு ‘மதராஸ் மனதே’ என்று  சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாப் போராட்டம் தொடங்கினார். அப்போது நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், “சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை கைவிட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்” என்று கூறினார்.

16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். 
ஆந்திரர்கள் போராட்டத்தைக் கண்டு  பிரதமர் நேரு அஞ்சி நடுங்கினார். உடனடியாக தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று 19.12.1952இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அப்போது  ஆந்திரப் பிரிவினைக்காக நியமிக்கப்பட்ட இராஜஸ்தான் நீதியரசர் வாஞ்சு அவர்கள்  ஆந்திராவின் இடைக்கால தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இதனை எதிர்த்து ம.பொ.சி. சென்னை மாநகராட்சி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஆந்திரர்களுக்கு தற்காலிகமாகக் கூட சென்னையை தரக்கூடாது என்று தீர்மானம்  கொண்டு வரச்செய்தார். 1948 முதல் 1955 வரை  ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் ஆல்டர் மேன் பதவி வகித்தவர். அவரின் முயற்சியால் சென்னை மாநகராட்சிக் கொடியில் புலி, வில், கயல், எனும் மூவேந்தர் சின்னம் பொறிக்கப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.
சென்னை மாநகராட்சி தீர்மானமும், அப்போதைய  முதல்வர் இராசாசியின் பதவி விலகல் முடிவும் நேருவுக்கு கடும் நெருக்கடியைத் தந்தது. நேரு சென்னை நகரம் அல்லாத ஆந்திர மாநிலத்தை உருவாக்க சம்மதித்தார்.  25.3.1953இல் சென்னை நீங்கலாக தகராறுக்கு இடமில்லா சித்தூர் மாவட்டம் உள்பட தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
ஆனால்,  அதில் தகராறுக்குரிய தமிழ்ப்பகுதிகளான திருத்தணி, புத்தூர், சித்தூர், காளகத்தி, திருப்பதி, பலவனேரி ஆகிய ஆறு வட்டங்கள்  சித்தூர் மாவட்டத்தில்   இணைக்கப்பட்டிருந்தன.
ஆந்திரருக்கு துணைபோகும் நேருவின் அறிவிப்புக்கு எதிராக சித்தூர் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.  சத்தியாகிரகம், பொதுவேலை நிறுத்தம், இரயில் மறியல் என்று தொடர்ந்து  வடக்கெல்லையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.  18.5.1953இல் புத்தூரில் நடந்த வடக்கு எல்லைப்பாதுகாப்புக் குழு  பொதுக்கூட்டத்தில் தெலுங்கர்கள் புகுந்து கற்களை வீசினர். அதில் கலந்து கொண்ட ம.பொ.சி. நல்ல வேளையாக உயிர் தப்பினார்.
அதன் பிறகு 3.7.1953 இல் எல்லை ஆணையம் அமைக்கக் கோரி திருத்தணிகையில் தடையை மீறி அறவழிப் போராட்டம் நடத்தப் போவதாக ம.பொ.சி. அறிவித்தார். முதல்வர் இராசாசி போராட்டத்தை கைவிடும்படி தந்தி அனுப்பினார்.  அதற்கு ம.பொ.சி. எழுதிய கடிதம் பின்வருமாறு:

 “தலைவர்கள் வருவார்கள், போவார்கள். தமிழ்நாடு அப்படி வந்துபோகும் பொருளல்ல, என்றென்றும் நிலைத்திருக்கும் புனித பூமி. தலைவருக்குக் காட்ட வேண்டிய மரியாதைக்காகத் தமிழகத்தின் எல்லைகளைப் பறி கொடுக்க என்னால் இயலாது”

 -என்று பதில் கடிதம் எழுதி விட்டு தடையை மீறினார். இராசாசி அரசால் கைது செய்யப்பட்ட ம.பொ.சி.க்கு நீதிமன்றம் ஆறுவார காலம் சிறைத் தண்டனை வழங்கியது.

போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட நேரு அரசு சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என ஒப்புக் கொண்டது. எல்லை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் ஓராண்டாகியும்  ஆணையம் அமைக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ம.பொ.சி. 3.7.1954இல் சித்தூர் தினம் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார்.

அப்போதைய முதல்வர் காமராசர்  ‘காங்கிரசுகாரர்கள் யாரும் இதில் பங்கேற்கக் கூடாது’ என்று கட்டளையிட்டார். கட்சியின் தடையை மீறி தமிழரசு கழகம் சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

1947க்குப் பிறகு ம.பொ.சி. தமிழகத்திற்கு சுயநிர்ணயம் கோரி வந்ததை கைவிட்டு   மாநில சுயாட்சி கோரிக்கையையே  வலியுறுத்தி வந்தார். இதனை காமராசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பார்வையில் மாநில சுயாட்சி கூட பிரிவினைதான்.   தமிழரசு கழகத்தை முடக்குவதற்கு காமராசர்  முயல்வதாகக் கருதிய  ம.பொ.சி. 8.8.1954இல்  காங்கிரசை விட்டு வெளியேறினார்.
நேரு அரசு வாக்குறுதி அளித்தபடி, எல்லை ஆணையம் அமைக்காமல்  மூன்றாண்டுகளாக இழுத்தடித்து வந்தது. இதனைக் கண்டித்து ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு கூடியது. அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது. 
1956ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடைவிடாமல் போராட்டங்கள் நடைபெற்றன. ம.பொ.சி. தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணின், கவி கா.மு.செரீப், ஜி.உமாபதி, என்.ஏ.இரஷீத் ஆகியோர் சட்டமன்றம் முன்பு தொடர் மறியல் போராட்டம்  நடத்தியதில் கைது செய்யப்பட்டனர். அதில் ஈடுபட்ட  தமிழரசு கழகத் தோழர்கள் பழனி மாணிக்கம்,  திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகியோர் வீர மரணமடைந்தனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகே நேரு அரசு பணிந்து 1956 டிசம்பர் இறுதியில் படாஸ்கர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்க ஆணையிட்டது. அது சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளை கண்டறிந்து 1957இல் தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  திருத்தணி வட்டத்தில் 290 கிராமங்கள், சித்தூரில்  29 கிராமங்கள், புத்தூரில் 320 கிராமங்களும், 417 சதுர மைல் நிலப்பரப்பும் தமிழகத்திற்கு கிடைத்தன.

 2,39,502 மக்களும் தமிழகத்திற்குள் வந்தனர். வள்ளிமலை, திருவாலங்காடு, திருத்தணி, ஓசூர் பகுதிகள் நமக்கு கிடைத்தன. சித்தூர் நகரம், புத்தூர், நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரக்குப்பம் பகுதிகள் நாம் இழந்தவைகளாயின. 
 
தெற்கெல்லையில் திருவிதாங்கூர் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய  மார்சல் நேமணி, பெ.சு.மணி ஆகியோருக்கு ம.பொ.சி. துணை நின்றார். அங்கு சென்று பல்வேறு பரப்புரைகளில் ஈடுபட்டார்.
1946 முதல் 1960 வரை தமிழக எல்லைப் போரில் தீவிரம் காட்டினார். பின்னர் ம.பொ.சி.  சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” பெயர் சூட்டக் கோரி தமிழரசுக்கழகச் செயற்குழு கூட்டத்தில் 29.11.1951இல் தீர்மானம் நிறைவேற்றினார்.

1967இல் அன்றைய முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில்  “தமிழ்நாடு” பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார். அது ஆங்கிலத்தில் டமில்நாட் (Tamil Nad) என்று இருந்தது. அதை ஆங்கிலத்திலும் Thamizh Nadu என்று திருத்தம் கொடுத்தார் ம.பொ.சி. இத்திருத்தத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்ட அண்ணா அவர்கள் Tamil Nadu என்று தீர்மானத்தை முன் மொழிந்தார். அத்தீர்மானம் பின்னர் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றது.

 
மூன்றாம் வகுப்புவரை படித்த ம.பொ.சி. எழுதிய நூல்கள் 150க்கும் மேற்பட்டவை. “விடுதலைப் போரில் தமிழகம், புதிய தமிழகம் படைத்த வரலாறு, தமிழும் கலப்படமும், தமிழா?ஆங்கிலமா?, பாரதியாரும் ஆங்கிலமும், தமிழ்நாட்டில் பிற மொழியினர், ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு, ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு , விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழர் திருமணம், எனது போராட்டம், ஒளவை-யார்?, ஆகியவை இவர் எழுதியவை. இவற்றுள் “எனது போராட்டம்” நூல் வரலாற்று காலப் பெட்டகமாகும்.

 

தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் அவர் பேராயக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இச்செயல் முற்றிலும் சந்தர்ப்பவாத அரசியலாகும். இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் “சிலம்புச் செல்வர்” என்றழைக்கப்பட்ட  ம.பொ.சி. 3.10.1995இல் காலமானார். 
ம.பொ.சி. எழுப்பிய தமிழக எல்லைக் காப்பு, தமிழ்நாடு பெயர் மாற்றம், தமிழ் ஆட்சிமொழி, மாநில சுயாட்சி கோரிக்கைகள் எல்லாம் தமிழ்த்தேசிய இனத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் தான். ஆனால் இவற்றையெல்லாம் தடுத்துக் கொண்டிருந்த இந்திய தேசியத்தோடும்,  சமசுகிருதம்- இந்திமொழிகளோடும் அவர்  நட்புப் பாராட்டியது தவறான மற்றும் தன்னோக்குவாத  அணுகுமுறையாகும். தமிழீழப் போராட்டத்தை அவர் எதிர்த்தது ஏற்க முடியாத வரலாற்றுத் தவறாகும்.

இருப்பினும்,  தமிழக வடக்கெல்லைப் போரில் அவர் காட்டிய மன உறுதியும், விடாமுயற்சியும்,  தொடர் போராட்டமும் தான் சென்னையையும், திருத்தணியையும் மீட்டுத் தந்தன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

நூல் தரவுகள்:

 1.ம.பொ.சி. எழுதிய “எனது போராட்டம்

2. கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய “சிலம்புச் செல்வர் ம.பொ.சி.”

3.கோல்டன் ந.சுப்பிரமணியம் எழுதிய “தமிழக வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும்”.
நன்றி: 

வரலாறு அறிவோம், கதிர் நிலவன், 

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் (சூன் 16-30, 2017)

மார்சல் நேசமணி

மார்சல் நேசமணி

“தென் எல்லைக் காவலர்”

மார்சல் நேசமணி
பிறந்த நாள்
12.6.1895

மொழி, இனம், தாயகம் இந்த மூன்றும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகள். 1956க்கு முன் இந்தியத்துணைக் கண்டத்தில் மொழிவழித் தாயகங்கள் உருவாக்கப்பட வில்லை. இந்திய விடுதலைக்கு முன்னரே மொழிவழித் தேசிய உணர்வு பெற்று மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள்  மொழிவழி மாநிலம் கேட்டு போராடி வந்தனர்.

காங்கிரசு பேரியக்கத்தில் தொண்டாற்றிய ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர் மட்டுமே மொழிவழித் தாயக கோரிக்கையின் தேவையை உணர்ந்தனர். காங்கிரசு ஆதரவு தர மறுத்த நிலையிலும் தனி இயக்கம் கண்டனர். வடக்கெல்லைப் போரில் சென்னை, திருத்தணி அதன் சுற்றியுள்ள பகுதிகளை ம.பொ.சி. அவர்களும், தென் எல்லைப்போரில் கன்னியாகுமரி அதன் சுற்றியுள்ளப் பகுதிகளை நேசமணி அவர்களும் பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவின்றியே போராடி நமக்கு மீட்டுத் தந்தனர்.

திருவிதாங்கூர் சமசுதானத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித் திணிப்பு, தாயக மண் பறிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழர் விடுதலை காண வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பியவர் மார்சல் நேசமணி.

12.6.1895ஆம் ஆண்டு அப்பல்லோசுட்- ஞானம்மாள் இணையருக்கு மகனாக நேசமணி பிறந்தார். இவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி. ஆகும். இவர் நாகர் கோயில் ஸ்காட் உயர்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, பின்னர் நெல்லை சி.எம்.எஸ். கல்லூரியில் பட்ட முன்படிப்பில் சேர்ந்து படித்தார்.

திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பட்ட மேல் படிப்பைத் தொடர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார். கர்நூல், திருச்சியில் ஆசிரியர் பணி புரிந்த நிலையில் அநீதியால் பாதிக்கப்படும் மக்களுக்கு தொண்டாற்ற விரும்பினார். அதற்கேற்ற வகையில் திருவனந்தபுரத்தில் சட்ட படிப்பைக் கற்று முடித்தார்.

1.9.1914இல்.பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க கரோலின் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

1921ஆம் ஆண்டில் நாகர் கோயிலில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். அப்போது அவர் பணியாற்றிய நீதிமன்றத்தில் சாதிப்பாகுபாடு நிலவி வந்தது. கையுள்ள நாற்காலிகள் மேல்சாதியாருக்கும், முக்காலிகள் (stool)  ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமரும் நிலை இருந்தது. இதை நேசமணி கடுமையாக எதிர்த்ததோடு முதன்முதலாக கையுள்ள நாற்காலியில் அமர்ந்து தனது உரிமையை நிலை நாட்டினார்.

குற்றவியல் வழக்குகளில் திறம்பட பணியாற்றியதால் மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கினார். இதன்காரணமாக 1943ஆம் ஆண்டில் நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவிதாங்கூரில் சொத்துரிமை உள்ளவர்கள் மட்டுமே நிர்வாக சபைத் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியும் . இந்நிலையை மாற்ற விரும்பிய நேசமணி  திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி.இராமசாமி ஐயரிடம் போராடி வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டில் நாகர்கோயில் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றார். முதன்முறையாக கல்குளம், விளவங்கோடு வட்டங்களின் பிரதிநிதியாக திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமூகநீதிக் கொள்கையில் பேரார்வமிக்க நேசமணி  9.12.1945இல் நெய்யூர் எட்வின் அரங்கத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு எனும் சமூகநீதி இயக்கத்தை தோற்றுவித்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னரும் திருவிதாங்கூர் அரசால் அங்கு வாழும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு  சொல்லொண்ணத் துயரம் அடைந்து வந்தனர். மலையாள- தமிழ் மக்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்ட  சமசுதான காங்கிரசு கட்சியும்  ஐக்கிய கேரளம் உருவாகும் நிலை வந்தால் தாய்த்தமிழகத்தோடு தமிழ்ப்பகுதிகள் இணைக்கப்படுவதாக உறுதிமொழி  தந்தது. அதில் மலையாளிகள் ஆதிக்கம் மிகுந்து தமிழர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. திரு. தமிழ் மக்களின் வேதனைகளை நேரு தலைமையிலான காங்கிரசுக் கட்சியும் கண்டும் காணாமல் இருந்து வந்தது.

மலையாளிகளின் நலன் காக்கும் சமசுதான காங்கிரசுக்கட்சி போல தமிழர் நலன் காக்கும் கட்சி ஒன்று தேவை என்பதை நேசமணி உணர்ந்தார். அதனடிப்படையில் நாகர்கோயில் ஆலன் நினைவு மண்டபத்தில்  8.10.1947 இல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவித்தார்.

10.2.1948இல்  திருவிதாங்கூரில்  தேர்தல் அறிவிக்கப்பட்டது. மலையாளிகளின் சமசுதானக் காங்.கட்சிக்குப்  போட்டியாக நேசமணியின் திரு.தமிழர் காங்.கட்சி  களத்தில் குதித்தது. தோல்வி பயம் கொண்ட   சமசுதான காங்.கட்சிக்கு ஆதரவாக மலையாள காவலர்கள் துணை நின்று  வன்முறையில் ஈடுபட்டனர். இரண்டாயிரம்  தமிழர்கள் ஆண், பெண் பேதமின்றி தாக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கில் பொய்வழக்குகள் போடப்பட்டன. மாங்காட்டில் தேவசகாயம் என்பவரும்,  பெரியவிளையில் செல்லையன் என்பவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். 

மொத்தமுள்ள 120 இடங்களில் சமசுதான காங்.கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் 18 இடங்களில் போட்டியிட்ட திரு.தமிழர் காங்.கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. விளவங்கோடு தொகுதியில்  போட்டியிட்ட நேசமணி வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

17.6.1948இல் மொழிவழி மாநிலம் அமைப்பதற்காக குடியரசுத்தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்களால் நியமிக்கப்பட்ட  தார் குழுவானது ஐக்கிய கேரளம் அமைக்க பச்சைக் கொடி காட்டியது. உடனடியாக கேரளக் காங்கிரசு (மலபார்) கட்சித் தலைவர் கேளப்பன் கேரளம் முதல் காசர்கோடுவரை “ஐக்கிய கேரளம்”அமைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். குமரி எங்கள் தலை என்றும், திருவனந்தபுரம் எங்கள் நெஞ்சு என்றும் , காசர் கோடு எங்கள் பாதம் என்றும், தலையை ஒருநாளும் இழக்க மாட்டோம் என்றும் மலையாளிகள் ஒற்றுமையாக முழங்கினர்.

மலையாளிகளின் நெருக்குதலைக் கண்டு அஞ்சிய பிரதமர் நேரு 1949இல் மலையாளிகளின் இன்னொரு தனிப்பகுதியாக இயங்கிய கொச்சியை திருவிதாங்கூருடன் இணைக்க முடிவு செய்தார். இது அறிவிக்கப்படாத ஐக்கிய கேரளமானது.   “விசாலா ஆந்திரா” கேட்டு நீண்ட நாட்களாக போராடியவர்களுக்கு கிடைக்காத வெற்றி, “ஐக்கிய கேரளம்” கேட்டுப் போராடிய மலையாளிகளுக்கு உடனடியாகக் கிடைத்தது. இதற்குக் காரணம் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு  உதவியாக இருந்த வி.பி.மேனன் ஆவார்.

தில்லி அரசின் நயவஞ்சகச் செயல் மார்சல் நேசமணிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. உடனடியாக நேசமணி, எ.ஏ.ரசாக், சிவராமபிள்ளை ஆகிய மூவரும் பட்டேலின் உதவியாளர் வி.பி.மேனனை சந்தித்து மனு அளித்தனர். அதில், “திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்குமாறு”  வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பிரச்னையை கவனிக்க எனது அமைச்சர் எனக்கு எந்த அதிகாரமும் வழங்க வில்லையே என்று வி.பி.மேனன் நழுவிப் பேசவே , மூவரும் வேறுவழியின்றி வெளியேறினர்.

உடனடியாக நேசமணி தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக 13.4.1949இல் திருவிதாங்கூர் அரசின் வெளியீட்டையும்,  முத்திரையையும் கொளுத்தும்படி வேண்டிக் கொண்டார். நத்தானியல், ஆர்.கே.ராம், காந்திராமன், பி.எஸ்.மணி ஆகியோர் கொளுத்தும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

5.11.1949இல் சென்னையில் ம.பொ.சி.அவர்களின் தமிழரசுக் கழக மாநாட்டில் நேசமணி பங்கேற்றுப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் நேசமணியிடம்,” ஐக்கிய கேரளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்படாமல் இருந்தால் நீங்கள் ஐக்கியத் தமிழகம் அமைக்க வேண்டுமென்று சொல்லியிருப்பீர்களா? ” என்று வினா எழுப்பப்பட்டது. அதற்கு நேசமணி, ” வெள்ளையர் போகாமல் இருந்தால் ஐக்கியக் கேரளம் அமைய வேண்டுமென்று கேட்டிருப்பார்களா?  என்று இப்போது நான் கேட்டால் அது புத்திசாலித்தனமான கேள்வியாக இருக்குமா?”  என்று கூறவே,  கேள்வி கேட்ட செய்தியாளர் வாயடைத்துப் போனார்.

6.1.1950இல் திரு.தமிழ்.காங். சார்பில் குமரியில் “தமிழ்நாடு எல்லை மாநாடு” நடைபெற்றது. இதில் கவிமணி தேசிக விநாயகம் தொடக்க உரையாற்றினார். அதில் தலைமை உரை நிகழ்த்திய நேசமணியின் பேச்சு உணர்வுபூர்வமாய் எழுச்சியோடு இருந்தது. அதுவருமாறு:

“கேரள மாகாணம் உருவாவதற்கு தமிழன் ஒருபோதும் தடை கூறவில்லை. ஆனால் தமிழனின் ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாது கேரள மாகாணம் வேண்டுமென டில்லிக்குக் காவடி எடுத்துச் செல்லும் கேரளியரே, அந்த உரிமையை, மலையாளி ஆதிக்கத்தை பொறுக்க முடியாத ஐக்கிய சமஸ்தானத்து தமிழனுக்கு வழங்கத் தயங்குவானேன்?” …

இங்குள்ள தமிழன் இன்னும் தாழ்ந்து கிடப்பதென்பது எண்ணவும் முடியாத ஒரு விஷயமாகும். துப்பாக்கியினாலும், போலீஸ் குண்டாந்தடியாலும் , பொய் வழக்குகளாலும் , அவசர சட்டங்களினாலும் , ஐக்கிய சமஸ்தானத் தமிழனை, அதுவும் அவனைக் கைதூக்கி எடுக்க தாய்த்தமிழகம் முனைந்திருக்கும் இந்த வேளையில் அடக்கி ஒடுக்கி ஆண்டு விடலாம் என்று கேரள ஆதிக்கவாதிகள் எண்ணுவது வெறும் பகற்கனவேயாகும்.!”

1952இல் திரு.தமிழ்.காங்.கட்சி இரண்டாக பிளவுபட்ட நிலையில் பாராளு மன்ற, சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அத் தேர்தலில் நேசமணி 8  இடங்களில் வெற்றி பெற்றார். இது அவருக்கு மக்களிடமிருந்த செல்வாக்கை மீண்டும் மெய்ப்பித்தது. இதை உணர்ந்து பிரிந்து சென்ற தாணுலிங்கனார் தலைமையிலான குழுவினர் ஓரணியில் இணைந்தனர். இதனை தாயுள்ளத்தோடு நேசமணி ஏற்றுக் கொண்டார். அப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1954 இல் திருவிதாங்கூர் காங்கிரசுக் கட்சி அமைச்சரவை கவிழ்ந்ததால்  திரு.கொச்சி சட்ட மன்றத்திற்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருவிதாங்கூர் (மலையாள) காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவாக  காமராசரும், நேருவும் களம் கண்டனர். அப்போது காமராசர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது, “மார்சல் பட்டத்தை நேசமணிக்கு எவன் கொடுத்தான்? நேசமணி எந்த யுத்த களத்திற்குப் போனார்? மார்சல் பட்டமென்ன கடைச்சரக்கா?” என்று  கிண்டல் செய்தார்.
மார்சல் நேசமணியோ மீண்டும் 12 இடங்களில் வெற்றி பெற்று நேரு, காமராசர் இருவருக்கும் பதிலடி கொடுத்தார்.
( நேசமணிக்கு “மார்சல்” பட்டத்தை அளித்து சிறப்பித்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.இரசாக் என்பது குறிப்பிடத்தக்கது)

தேவிகுளம், பீர்மேடு பகுதியில் நேசமணி செல்வாக்கு பெருகுவதை அன்றைய மலையாள முதல்வர் பட்டம் தாணுப் பிள்ளை விரும்பவில்லை. தமிழ்த் தேயிலைத் தொழிலாளர் மீது அடக்குமுறையை ஏவினார். பாதிக்கப்பட்ட தமிழ்த் தொழிலாளரை பார்ப்பதற்காக மூணாறு சென்ற நேசமணி, சிதம்பரநாதன், அப்துல் ரசாக்  ஆகியோர்  மீது பொய் வழக்குப் போடப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

11.8.1954 இல் ஆகஸ்டு விடுதலை நாள் கிளர்ச்சியை நேசமணி சார்பில் குஞ்சன் நாடார் அறிவித்தார். திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளில் வேலை நிறுத்தம், கடையடைப்பு, சாலை மறியல் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அப்போது நடந்த கிளர்ச்சியில் 9 தமிழர்கள் மலையாள வெறியின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர்.

கண்டால் அறியும் புள்ளி என்ற கொடிய சட்டம் ஏவப்பட்டு தமிழர்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சந்தேகத்தின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் கடும் சித்திரவதைக்கு உட்டடுத்தப்பட்டனர். இது இரண்டாவது முறையாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலாகும்.

1953இல் ‘விசாலா ஆந்திரா’ கேட்டு  போராட்டம் தீவிரமடைந்தது. அதனைக் கண்டு கலக்கமுற்ற நேரு  மொழிவழி மாகாணம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். பசல் அலி தலைமையில் மாநில புனரமைப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினராக பொறுப்பு வகித்த பணிக்கர் எனும் மலையாளியின் ஆதிக்கம் காரணமாக தமிழர்கள் அதிகம் வசித்த  ஒன்பது வட்டங்களில் நான்கு வட்டங்கள் மட்டுமே தமிழகத்தோடு இணைக்க ஒப்புதல் தரப்பட்டது.

அதன்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை நகர்ப்பகுதி ஆகிய 5 வட்டங்கள்  தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. மீதமுள்ள 4 வட்டங்களான தமிழர்கள் அதிகம் வசித்து வந்த தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை வனப்பகுதி, நெய்யாற்றின் கரை ஆகிய வட்டங்களை மலையாளிகள் பிடுங்கிக் கொண்டனர்.

இதனைக் கண்டு கோபமுற்ற நேசமணி பாராளுமன்றத்தில் 1955ஆம் ஆண்டு 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் வரலாற்று சான்றாவணங்களைக் காட்டி முழக்கமிட்டார். பிற்காலத்தில் முல்லைப்பெரியாறு அணைச்சிக்கல் வருமென்று உணர்ந்த காரணத்தாலோ என்னவோ அதனையும்  உணர்ந்தே பேசினார். அது வருமாறு:

” பெரியாறு நீர் தேக்கத்திற்கு நீர் வடிப்பு 305 சதுர மைல்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது… எனவே தேவிகுளம், பீர்மேடு இரு தாலுக்காக்கள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும்…

தேவிகுளத்திற்குச் சென்று தேயிலை காடுகளைக் கேளுங்கள். தமிழ் மக்களின் நெற்றி வியர்வை சிந்தி தமிழர்களின் குருதியால் வளர்க்கப்பட்டவை என்றும், தமிழ் முன்னோர்களின் எலும்பும் அவர்கள் சாம்பலும் தேயிலைச்செடிகளுக்கு உரமாயின என்றும், தமிழ் இளவல்களின் பிஞ்சுக்கரங்களால் நட்டு வளர்க்கப்பட்டவை அவை என்றும், வரலாறு கூறும் அச்செடிகள். அச்செடிகளும் அவ்வூர் மக்களும் கூறுவர் இது தமிழ்நாடு தான் என்று!”

1956, நவம்பர் 1இல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்ட பிறகு இழந்த தமிழ்ப்பகுதிகளை மீட்டெடுப்பற்கான போராட்டங்கள் வலுப் பெறவில்லை. இந்நிலையில் , 1957ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாள் காமராசர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் திரு.தமிழ்.காங்.கட்சியை இணைக்க பெரும்பாலனோர் ஒப்புக் கொள்ளவே, வேறுவழியின்றி நேசமணி அதனோடு இணைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிள்ளியூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் காங்கிரசுக் கட்சி தோற்ற நிலையில் குமரி மாவட்டத்தில் அது 6 இடங்களில் வெற்றி பெற்றது. இது நேசமணியின் தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தியது. அப்போது நடைபெற்ற நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டுமொரு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருமுறை கூட மக்களால் தோற்கடிக்கப்படாத மாபெரும் தலைவராக விளங்கிய மார்சல் நேசமணி 1.6.1968இல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்.

நூல் தரவுகள:
1.திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, -பி.யோகீசுவரன்
2. தமிழக எல்லைப் போராட்டங்கள்,
-முகிலை இராச பாண்டியன்
3. நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்,
– ஏ.ஏ.ரசாக்

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், சூன் 1-15 (2017)