சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள்
18.7.1967
தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மான நாள்
18.7.1967
உண்மை வரலாறு!
(1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் மொழிவழித் தமிழ் நாடு உருவாக்கப்பட்ட நாளாகும்.
மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றவர்களின் போராட்டங்களால் அண்டைய தேசிய இனங்களால் பறிக்கப்பட்ட தமிழக எல்லைகள் ஓரளவு மீட்கப்பட்டன.
நவம்பர் 1ஆம் நாளை தமிழகப் பெருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசியர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இதற்கு ஏற்பு வழங்கப்பட்ட து. ஆனால் தற்போதைய ஸ்டாலின் ஆட்சியில் “தமிழ் நாடு நாள்” சூலை 18க்கு என்று மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிறந்த நாளை விட, தமிழ் நாடு பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவது தான் சிறப்பு என்று ஸ்டாலின் அரசு விளக்கம் தருவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழக எல்லை மீட்புப் போரில் திராவிட இயக்கம் தலைமை தாங்கிப் போராட வில்லை என்பதை உண்மையான வரலாறு படித்தோர் அறிவர்.
சூலை 18இல் தமிழ்நாடு பெயர் சூட்டியது அண்ணாவின் ஆட்சி என்பதால் வேறு நாளுக்கு மாற்றுவது என்பது எல்லை மீட்கப் போராடிய தலைவர்களின் ஈகத்தை மறைக்கின்ற முயற்சியாகும்.
குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவது தான் எல்லோரும் கடைபிடிக்கும் மரபு. குழந்தைக்குப் பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவதை அறிவார்ந்த செயலாக பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல; அது வரலாற்றை மறைக்கும் நோக்கம் கொண்டதாகவே கருதப்படும்.
தமிழ்நாடு பெயர் சூட்டிய வரலாறும் கூட திராவிட இயக்கத்திற்கே உரித்தான ஒன்றல்ல. திராவிடம் இயக்கத்தைச் சாராதவர்களும் மிக அதிகமாக பங்கு வகித்துள்ளனர். அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.)
தமிழ்நாடு பெயர் மாற்ற வரலாறு!
– கதிர் நிலவன்
1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டப் பிறகு, ஹைதராபாத்தும் இதரப் பகுதிகளும் சேர்ந்து ‘ஆந்திரப் பிரதேசம்’ என்றும் திருவிதாங்கூரும் இதரப் பகுதிகளும் சேர்ந்து ‘கேரளம்’ என்றும் அழைக்கப்பட்டது.
ஆனால், எஞ்சிய சென்னை மாகாணம் உள்ளிட்ட திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளோ 11 ஆண்டுகளாகியும் தமிழ்நாடாக மாறவில்லை.
இங்கு மொழிவழித் தேசிய உணர்வை ஊட்ட மறுத்த இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழர்களை விழிப்படைய செய்யாமல் தூங்க வைத்ததே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.
தமிழ்நாடு என்ற பெயர் எவர் ஒருவரோ முன்மொழிந்து தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பெயரல்ல. இது இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறு தொட்டு அழைக்கப்பட்டு வந்த பெயராகும்.
சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் தமிழகம், தமிழ்நாடு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
” வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுகம்” என்று தொல்காப்பியமும்
“தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம்” என்று பரிபாடலும்
“இமிழ் கடல் வேலி தமிழகம்” என்று பதிற்றுப்பத்தும்
“தென்தபிழ் நாடு” என்று சிலப்பதிகாரமும்
” சம்பூந் தீவினுள் தமிழக மருங்கில்” என்று மணிமேகலையும்
தமிழ் நிலம் குறித்த பெயர்களை குறிப்பிடுகின்றன.
பிரித்தானியரின் ஆட்சியில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாரும்
“நித்தம். தவம் செய்யும் குமரி எல்லை – வட மாலவன் குன்றம் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு” என்று தமிழகத்தின் எல்லையையும், பெயரையும் ஒருசேர குறிப்பிடுகிறார்.
பல்வேறு அந்நிய ஆட்சியாளர்களின் நுகத்தடியில் தமிழகம் சிக்குண்ட காரணத்தால் தமிழர் நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டமுடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.
பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்ட இந்திய மக்களிடம் ஏற்பட்ட மொழிவழி உணர்ச்சியும், மொழிவழி மாநிலக் கிளர்ச்சியுமே தத்தமது இனத்தின் நிலப்பெயர்கள் சூட்டும் நிலையை உருவாக்கியது.
தமிழகத்தில் 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாக “தமிழ்நாடு தமிழருக்கே” கோரிக்கை எழுப்பப்பட்ட போதிலும் அது தொடர்ந்து வலுப்பெறவில்லை. அது வெற்றி பெற்றிருந்தால் ” தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும்.
அந்தப் போராட்டம் திராவிட இயக்கத்தவர்கள் கைகளுக்கு சென்று திராவிட நாடாக திசை மாறிப் போனதால், தமிழ்நாடு என்ற பெயரைக்கூட சூட்ட முடியாமல் போனது.
1952இல் ஆந்திரர்கள் விசால ஆந்திரம் கோரிக்கையை தீவிரப்படுத்தி போராடி வெற்றி பெற்றனர். அப்போது தான் தமிழர்கள் வாழும் நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு என்ற பெயரை சூட்டும் கோரிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது.
21.07.1953இல் காங்கிரஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ம.பொ.சி. அவர்கள் முதன் முறையாக இக் கோரிக்கையை எழுப்பி, “எஞ்சிய சென்னை மாகாணம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லப்படுகிறது. ஏன் அப்படியே இருக்க வேண்டும்? தமிழ் ராஜ்ஜியம் என்ற பெயர் வைக்கின்ற அளவுக்கு மற்ற தென் கன்னடம், மலையாள ஜில்லாக்களைப் பிரித்து இதை அமைத்தால் என்ன கெட்டுப் போய்விடும்?” என்று பேசினார்.
அதன் பிறகு 27.04.1954 இல் சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் பெண்ணாடத்தில் ஆட்சிமொழி மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் சட்ட மேலவை உறுப்பினர் அ. கசபதி நாயகர் தலைமை தாங்கிட, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழ்க்கொடி ஏற்றினார்.
அதில், “தமிழகத்திற்கு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும், ஆந்திரம் பிரிந்த சென்னையை” தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.
அதேபோல் இச்சங்கம் 31.05.1954இல் திருநெல்வேலியில் நடத்திய மாநாட்டிலும் ” தமிழ்நாடு” பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1934இல் சென்னை மாகாண தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் தமிழறிஞர் கா.சு. பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
03.03.1955இல் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் சட்டமன்றத்தில் வரவு – செலவு அறிக்கை விவாதத்தில், இக்கோரிக்கையை ஆதரித்து “இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழா் ஆட்சி வந்துவிட்டதென்று வெளியே பேசப்படுகிறது. அதோடு பச்சைத் தமிழா் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பச்சைத் தமிழா்களுடைய ஆட்சியில் இந்த ராஜ்யம் தமிழ்ராஜ்யம் என்று அறிவிக்கப்பட வில்லையானால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.
29.11.1955இல் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவில் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை – மெட்ராஸ் ஸ்டேட்” என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் ” என்று அழுத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக 1956 நவம்பர் 1இல் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தமிழர் பகுதிகளான தேவிகுளம், பீர்மேட்டை கேரளத்திற்கு வழங்கிய பசல் அலி ஆணையத்தைக் கண்டித்து ம.பொ.சி. அவர்கள் 27.01.1956இல் திரு. ஜி. உமாபதி (சென்னை மாவட்ட தமிழரசுக் கழகத் தலைவர்) வீட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் அண்ணா, இரா. நெடுஞ்செழியன் (தி.மு.க.), ம.பொ.சி, தி.க. சண்முகம், ஜி. உமாபதி, சின்ன அண்ணாமலை ( தமிழரசுக் கழகம்), ப. ஜீவானந்தம், மணலி கந்தசாமி (கம்யூனிஸ்ட் கட்சி), க.இரா. நல்லசிவம், எம். சின்னச்சாமி, ப.சு. சின்னத்துரை ( பிரஜா சோசலிஸ்ட் கட்சி) , சர்.பி.டி. இராசன் (ஜஸ்டிஸ் கட்சி), கே. விநாயகம் (வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுத் தலைவர்), பாவேந்தர் பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், நாரண துரைக்கண்ணன், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தலுக்கு இணங்க தமிழ்நாடு பெயர்மாற்ற கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது.
அக்கூட்டத்தில், தமிழக எல்லைகளை மறு வரையறை செய்தல், தட்சண பிரதேச திட்டத்தை எதிர்த்தல், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 20.02.1956இல் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தை திராவிடர் கழகமும், காங்கிரசுக் கட்சியும் புறக்கணித்தன.
அப்போது காமராசர் தலைமையிலான காங்கிரசுக் கட்சி தமிழக எல்லைகளை மீட்பதிலும், தமிழ்நாடு பெயர் சூட்டுவதிலும் எதிரான நிலைப்பாட்டையே கடைபிடித்தது.
தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினால் வெளி நாட்டினரும், வட நாட்டினரும் புரிந்து கொள்ள முடியாது என்றும், “மெட்ராஸ் ஸ்டேட் ” என்று அழைத்தால் தான் வெளி உலகுக்கு தெரியும் என்றும் அது வாதிட்டது .
28.03.1956இல் சட்டமன்றத்தில் மாநிலங்கள் மறுசீரமைப்பு வரைவுத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய ப. ஜீவானந்தம் அவர்கள் “மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது இந்திய தேசம் சுக்குநூறாக உடைந்து விடாது” என்றும் “வளர்ந்து வரும் ஜனநாயகத்திற்கேற்ப சென்னை ராஜ்ஜியத்தை தமிழ் நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது?” என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து நடைபெற்ற அக்கூட்டத் தொடரில் பங்கேற்ற எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. வேலு, சி. கந்தசாமி, ஏ. இரத்தினம், கே.ஆர். நல்லசிவம், கே. விநாயகம், கே.டி. இராஜீ ஆகியோரும் தமிழ்நாடு பெயரை உடனடியாக சூட்ட வேண்டும் என்று வாதிட்டனர்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், காங்கிரசு கட்சிக்குள்ளும் ஒரு கலகக்குரல் எழுந்தது.
முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதி என்று அறியப்பட்ட க.பெ. சங்கரலிங்கனார் அவர்கள் 27.07.1956இல் விருதுநகரில் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். காங்கிரசு கட்சி அவரின் போராட்டத்தை கண்டுகொள்ள மறுத்தது.
காங்கிரசின் இந்தப்போக்கு குறித்து வேதனைப்பட்ட சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் தருவாயில், ஜனசக்தி துணையாசியர் ஐ. மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில் “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை” என்று எழுதினார். அவரை அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் சந்தித்து உண்ணாநிலையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவரோ உண்ணாநிலையை கைவிட மறுத்து 79ஆவது நாளில் உயிர் நீத்தார்.
1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பெயர் மாற்றம் ஒலித்த போதிலும், காங்கிரசு கட்சியே வெற்றி பெற்றது. முதன்முதலில் சட்டமன்றத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து சட்டமன்றத்தில் மட்டுமே வலியுறுத்தி பேசி வந்தனர்.
ஆனால், தமிழ்நாடு பெயர் மாற்றத்தை களப் போராட்டமாக விரிவுபடுத்திய பெருமை ம.பொ.சி. யையே சாரும்.
25.12.1960இல் சென்னை கோகலே மன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாட்டை முதன்முதலாக ம.பொ.சி. நடத்தினார். அந்த மாநாட்டிலே காந்தியார் நினைவு நாளில் 30.01.1961இல் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கழகம் சார்பில் சத்தியாகிரகப் போர் நடத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஊடகத்துறையின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. தமிழக ஏடுகளான தினத்தந்தி, தமிழ்நாடு, ஆனந்த விகடன், குமுதம், தினமலர் ஆகியவை தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. ஆனால் இந்து ஏடோ தமிழ்நாடு பெயர் மாற்றத்தினால் தேச ஒற்றுமை குலைந்து விடும் என்றும், மொழிச் சிறுபான்மையினருக்கு அச்சமூட்டும் என்றும் கடுமையாக எதிர்த்தது.
அது மட்டுமல்லாமல், தமிழ் மன்றங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி மன்றங்களிலும் இதைப் போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டன. அப்போது காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசு அதனை கடுமையாக எதிர்த்ததோடு பெயர் மாற்றத் தீர்மானம் போட்ட உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவதாக மிரட்டல் விடுத்தது. இதனைக் கண்டித்து தினமணி, மெயில், இந்து போன்ற ஏடுகள் தலையங்கம் தீட்டின.
பிரபல நாடகப் பேராசிரியர் பம்மல் சம்மந்த முதலியார் அவர்களும் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விட்டார்.
1961சனவரி 30ஆம் நாள் தமிழரசுக் கழகம் போராட்டத்தை தொடங்கியது. சென்னை, காஞ்சி, குடந்தை, வேலூர், திருச்சி, மதுரை, நாகர்கோயில், பழனி, தூத்துக்குடி, காரைக்குடி, திருவள்ளூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்திய தமிழரசுக் கழகத் தலைவர்களாகிய நாடகக்கலைஞர் ஒளவை சண்முகம், கு.சா. கிருஷ்ண மூர்த்தி, கவிஞர் கா.மு. செரீப், கு.மா. பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஏ.பி. நாகராசன், கலைக் காவலர் எம்.ஏ. வேணு, புலவர் கீரன், கோ. கலிவரதன், நாடகக் கலைஞர்கள் உடையப்பா , அவரது மனைவி வீரலெட்சுமி உடையப்பா, திருமதி சரோஜினி நாராயணசாமி, “அருட்பா அரசி” குருவாயூர் பொன்னம்மாள் உள்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்றைக்கு சட்டமன்றத்தில் நுழைய முயன்ற காமராசரின் காரை மறித்தும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் தொடர்ந்து அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக மறியல் போராட்டம் என்று 18 நாட்கள் போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
ம.பொ.சி. போராட்டம் நடத்திய அதே நாளில்தான் பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். சின்னத்துரை அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி கொண்டுவந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவர் இந்த தீர்மானத்தை ஐந்து மாதங்களுக்கு முன்பே கொடுத்திருந்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் காங்கிரசு அரசு காலம் கடத்தி வந்தது. அன்றைய விவாத நாளிலும் ம.பொ.சி.யின் போராட்டத்தை காரணங்காட்டி தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
அன்றைக்கு ம.பொ.சி. நடத்திய மறியல் போராட்டமும் பிரஜா சோசலிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கொண்டு வந்த பெயர் மாற்றத் தீர்மானமும், அவருக்கு ஆதரவாக தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பும் காமராசர் அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
24.02.1961இல் நடந்த சட்டமன்ற விவாதத்திற்குப் பிறகு, சென்னை மாகாணம் இனிமேல் ஆங்கிலத்தில் “MADRAS STATE” என்றும், தமிழில் “தமிழ்நாடு” என்றும் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்று ஒரே பெயரில் மாற்றம் செய்வதற்கு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தும்படி தில்லி அரசைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக இப்படியொரு சமரசத்தை காங்கிரசு அரசு அன்றைக்கு மேற்கொண்டது.
அதன் பிறகு தமிழர்களின் விருப்பமான அரசியல் சட்டத் திருத்தக் குரலுக்கு தமிழரல்லாத ஒருவர் வலு சேர்த்தார். அவர் பெயர் பூபேஷ் குப்தா. அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலவை உறுப்பினர். 1962 ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற மேலவையில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான வரைவை அவர் தான் முதன் முதலில் கொண்டு வந்தார். இதற்கு சட்டமன்றத் தீர்மான ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதாகக் கூறி, பூபேஷ் குப்தாவின் தீர்மானம் நாடாளுமன்ற மேலவையில் நிராகரிக்கப்பட்டது.
1962ஆம் ஆண்டுத் தேர்தலிலும் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றதால் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவில்லையென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வந்தது.
1964ஆம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த இராம. அரங்கண்ணல் மீண்டும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தபோது “அது முடிந்தபோன விசயம்” என்று காங்கிரசு அரசு கை கழுவியது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராசர் அதிகம் பேச மாட்டார். ஆனால், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியத்தை தன்னுடைய குரலில் அதிகமாக பேச வைத்தார். சி. சுப்பிரமணியம் சாமர்த்தியமாக சில பதில்களை கூறுவதில் வல்லவர் ஆவார்.
அவர் கூறுகிறார்; “மெட்ராஸ் என்பது ஆங்கிலப் பதம். தமிழில் அதை மெட்ராஸ் என்று அழைக்காமல் சென்னை நகரம் என்று தானே அழைக்கிறோம். சென்னை நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஒருவரும் கூறவில்லையே?”
ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் இருக்கட்டும், தமிழில் தமிழ்நாடு இருக்கட்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.
1952 முதல் 1967 வரை தமிழகத்தில் ஆட்சி நடத்தியது மட்டுமல்லாமல், மொழிவழி மாநிலம் பிரிக்கப்படாத கால கட்டத்திலே , தமிழ்நாடு என்ற பெயரை கட்சியின் பெயரில் சுமந்து நின்ற காங்கிரசு கட்சி ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றக் கோரிக்கையை நிராகரித்ததன் மூலம் அது வரலாற்றில் தீராப் பழியை தேடிக் கொண்டது.
1967இல் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு சட்ட ஏற்பு வழங்கப்பட்டது.
அப்போது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.பொ.சி. சென்னை ராஜ்ஜியத்தியத்தின் பெயரை “தமிழ்நாடு” என பெயர் மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அண்ணாவோ நானே இதை அரசின் சார்பாக கொண்டு வருவதாக உறுதி கூறியவுடன் ம.பொ.சி. தீர்மானத்தை திரும்பப் பெற்றார்.
18.07.1967இல் அண்ணா அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினார். இத்தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 20.12.1968இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது
அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது காங்கிரசு கட்சி அப்போதும் அரைகுறை மனதோடுதான் இத்தீர்மானத்தை ஆதரித்தது.
பெரியார் தமிழ்நாடு பெயர் மாற்ற பிரச்னையில் குழம்பிய நிலையிலும், மற்றவரை குழப்பிய படியும் இருந்துள்ளார்.
1964ஆம் ஆண்டு சூலை 23ஆம் நாள் தி.மு.க. உறுப்பினர் இராம. அரங்கண்ணல் “தமிழ் நாடு” பெயர் மாற்றம் கோரி தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பெரியார் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை ஆதரிக்க வில்லை. இராம. அரங்கண்ணல் அவர்கள் தமது உரையில் பெரியாரை “இரண்டு கெட்டான்” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அது பின் வருமாறு:
“ஈரோட்டுப் பெரியாரைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஈரோட்டுப் பெரியாருக்கு நாங்கள் என்றைய தினமும் எங்களை ஆளாக்கியவர் என்பதால் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தினம் ஈரோட்டில் இருக்கிற எங்கள் பழைய தலைவர் இரண்டுங் கெட்டனாக இருந்து கொண்டிருக்கிறார். அதே பாதையில் தான் நம்முடைய தட்சிண மூர்த்தி கவுண்டர் அவர்கள் பதிலும் இங்கே இருந்தது. தமிழகம் வேண்டும் என்றும் சொன்னார். அதே சமயம் என் தீர்மானத்தையும் எதிர்த்தார்.
(தமிழ் நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும் – ஆசிரியர்: அ.பெரியார், பக்கம் 150)
பெரியாரை இராம.அரங்கண்ணல் இரண்டுங்கெட்டான் என்று சொன்னதில் தவறொன்றுமில்லை.
பெரியார் 11.20.1955இல் “தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் பிரிந்தபோன பின்பும்கூட தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்கூட இருக்கக் கூடாது என்றும் பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சிசெய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழிக்கப் பார்க்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டி ஒரு அறிக்கை விட்டார்.
அதே பெரியார் தமிழ்நாடு பெயர் மாற்றம் வெற்றி பெற்றப் பிறகு 06.12.1968இல் விடுதலை தலையங்கத்தில், அண்ணாவின் முயற்சியை பாராட்டி விட்டு கூறுகிறார், “தமிழ் மக்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தினால் என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்து விட்டான் என்பதுபோல் இருக்கிறது. ஆசாமிக்கு கண் பொட்டைதான் என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பதுபோல் தோன்றுகிறது . . . அண்ணாதுரை நாடு என்பதாக பெயர் மாறினாலும் தமிழர்கள் அடிமை நாட்டில் அடிமையாக வாழ்வது மாற்ற மடையுமா? ” என்கிறார்.
தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராக பார்ப்பனர்களும் வடவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் என்று அன்றைக்கு கூறிவிட்டு, இன்றைக்கு பெயர் மாற்றத்தால் என்ன பயன் என்று கேட்பதன் மூலம் அவரும் பார்ப்பன – வடவர் சூழ்ச்சிக்கு பலியாகி விட்டாரோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்பதைக்கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்றுதான் அழைக்க வேண்டும் என்று இராசாசி அறிக்கை விட்டார். அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார்.
அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிடவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
ம.பொ.சி. அண்ணாவின் தீர்மானம் குறித்து ‘எனது போராட்டம்’ நூலில் கூறுகிறார் : “தீர்மானம் எதிர்ப்பின்றி பேரவைத் தலைவர் அறிவித்தபோது, முதல்வர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று கூற, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று உரக்க ஒலித்தனர். இப்படி, மும்முறை ஒலிக்கப்பட்டது. அப்போது என் உடம்பு சிலிர்த்தது.”
ஆம்! ஈகி சங்கரலிங்கனாரின் கனவு பலித்ததை எண்ணி சிலிர்க்காத தமிழர் எவரும் உண்டோ?
நன்றி :
1. தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும் – அ. பெரியார்
2. ஆட்சித் தமிழ்; ஒரு வரலாற்றுப் பார்வை – சு. வெங்கடேசன்
3. தமிழ்ப் பொழில் (இதழ்)
4. சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – ஜீவபாரதி
5. எனது போராட்டம் – ம.பொ.சிவஞானம்
6. தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு – கவிஞர் கருணானந்தம்
– கட்டுரை: கதிர் நிலவன்
Tamilthesiyan.wordpress.com